
உத்தரப்பிரதேச சிறையில் மனைவியுடன் தங்கியிருந்த எம்எல்.ஏ சிக்கினார். அவருக்கு உதவி செய்த 8 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேச மாநில மாவ் தொகுதியில் பாரதிய சுஹல்தேவ் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவாக அப்பாஸ் அன்சாரி இருக்கிறார். இவர் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதி ஆவார்.
இவர் துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் கொண்டவர். தேசிய அளவிலானப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். இதற்கிடையில் அப்பாஸ் ஹவாலா வழக்கில் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி சித்ரகுட் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், சித்தரகுட் மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ஆனந்து ரகசியமாக தனியார் வாகனத்தில் வந்து திடீர் சோதனை நடத்தினார். அப்போது கைதி அப்பாஸின் அறை காலியாக இருந்தது. பிறகு சிறையின் அனைத்து அதிகாரிகளையும் தம்முடன் வந்த காவல் படையை கொண்டு சோதனை செய்திருக்கிறார். இதில் சிறை கண்காணிப்பாளர் அசோக்கின் அலுவலக அறை உள்பக்கம் தாழிட்டவாறு இருந்தது. அதற்குள் கைதி அப்பாஸ் தன்னுடைய மனைவி நிக்கத்துடன் சிக்கினார்.
அவர்களிடம் இருந்த இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளும் சிக்கின. விசாரணையில் அப்பாஸ் கடந்த ஒன்றரை மாதமாக மனைவி நிக்கத்துடன் அந்த அறையில் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. இத்துடன் அப்பாஸ் தன் மனைவியின் கைப்பேசிகள் மூலம் தன்னுடைய வழக்குகளின் சாட்சிகளையும் மிரட்டி வந்ததுடன், பணம் பறிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக புகார் இருக்கிறது.
இவர்களை கையும் களவுமாக பிடித்த இளம் எஸ்.பி. பிருந்தா, வட இந்தியா முழுவதிலும் பிரபலமாகி பாராட்டை பெற்று வருகிறார். இதனிடையே, கைதி அப்பாஸுக்கு உதவியதாக சிறை அதிகாரிகள் எட்டு பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.சட்டவிரோதமாக தன் கணவருடன் சிறையிலிருந்த நிக்கத் தற்போது சட்டப்படி அதனுள் கைதியாக இருக்கிறார்.
அவர்களிடம் இருந்த இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய், தங்க நகைகள் சிக்கியிருக்கிறது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் அப்பாஸ் அன்சாரியின் தந்தை முக்தார் அன்சாரி. இவர் சிறையில் இருந்தபடி பலமுறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். முக்தார் மீது 30 வழக்குகள் இருக்கின்றன. முக்தாரின் ரூ.400 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, கட்டடங்களும் இடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.