
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் உள்ள வேப்பங்காடு கிராமத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த பேனர் முழுவதும் ஒரு ' நாளிதழ்' வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 'The Boys' என்ற வார்த்தையை மையமாக வைத்துத் தொடங்கிய அந்த நாளிதழில் கடந்த வருடம் நடைபெற்ற கொடை விழாவின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
அதன் பிறகு தான் நம் கவனத்தை ஈர்த்த பகுதி வந்தது. ஆரம்பத்திலேயே 'பந்தியில் கலவரம்' என்று கூறியது சற்று குழப்பத்தை உண்டாக்கியது. அடுத்து திருவிழாவிற்காக வாங்கி வைத்திருந்த பண்டங்களைத் தம்பி சாப்பிட்டு விட்டதால், அண்ணன் தம்பிக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்டதையும் காண முடிந்தது.
'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று பூங்குன்றனார் கூறியது இவர்களுக்குத் தான் பொருந்தியதோ என்னவோ, எல்லா ஊரையும் தம் ஊராக நினைத்து கொடை விழாவைச் சிறப்பிக்கும் அந்த நண்பர்களை நினைத்தால் ஆனந்த கண்ணீர் வருகிறது.
பின்னர் மேலே, "திரும்பிய பக்கமெல்லாம் நாங்கள்" எனப் பார்த்ததும், சற்று திடுக்கிட்டுச் சுற்றிப் பார்த்தோம். ஆனால் வேறு பேனர் எதுவும் கண்ணில் சிக்கவில்லை.
இது குறித்து கேட்டபோது,"நாம எதைப் பண்ணினாலும் இந்த உலகம் நம்மள திரும்பிப் பார்க்கனும்" என்றனர் அந்த 2k இளைஞர்கள்..
- மு.இசக்கிமுத்து.